Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

நற்பண்புகளின் முக்கியத்துவம்


ஒழுக்கம் என்பது இஸ்லாமிய கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்ததொரு விடயமாகும். இவ்வுலகத்தில் தான் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் மறுமை நாளில் நன்மை, தீமை கணக்கிடப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் என நம்பக்கூடிய ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அவன் கண்டிப்பாக பேணி நடக்க வேண்டிய விடயங்களில் இதுவும் ஒன்று. ஏனெனில், '(மக்களை) அதிகமாக சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வது இறையச்சமும் நற்குணமும் தாம்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 
(ஆதாரம்: திர்மிதி)

அதேநேரம் இறையச்சமும் நற்குணமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த, பிரிக்க இயலாத, இணைபிரியாத தண்டவாளங்களை போன்றவையாகும். ஏனென்றால் இறையச்சம் இருக்கின்ற மனிதனிடம் ஒழுக்கக்கேடுகள் இராது. ஒழுக்கக்கேட்டில் திளைத்திருக்கும் மனிதன் உண்மையான இறைநம்பிக்கையாளனாக இருக்க மாட்டான்.

இதையே நபி(ஸல்) அவர்கள், 'உலோபித்தனமும், தீயகுணமும் ஓர் இறைநம்பிக்கையாளனிடம் ஒன்று சேராது' என்று கூறுகிறார்கள். 
(ஆதாரம்: திர்மிதி)

எனவே மறுமையில் தனக்கு சுவனம் கிடைக்க வேண்டும் என விரும்பும் ஒவ்வொரு முஸ்லிமும் தான் செய்யும் செயல்கள் அனைத்தையும் அது நற்செயலா அல்லது தீயசெயலா என அச்செயலை செய்யத் தொடங்குவதற்கு முன்னர் கவனம் செலுத்தி செய்வது மிகவும் முக்கியமாகும்.

பொதுவாக செயல்களைப் பொறுத்தவரை அது எத்தகையது என்பதை நிச்சயிப்பதில் உள்ள கண்ணோட்டம் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. ஒருவர் பார்வையில் தீயதாகத் தெரியும் ஒரு செயல் இன்னொருவர் பார்வையில் தீயதற்றதாகவோ அல்லது நன்மை பயப்பதாகவோ கருத வாய்ப்புள்ளது.

உதாரணமாக மது அருந்துவதை, சிலர் தங்களின் சமூக அந்தஸ்தைக் காட்டுவதாகவும் புகைபிடிப்பதை சிலர் தங்களுக்குப் புத்துணர்ச்சி அளிப்பதாகவும் கருதலாம். இது போன்ற பல தீய செயல்களை சரி காண்பவர்கள் இருக்கலாம். ஆனால் இதே செயல்களை தவறாகவும் பிழையாகவும் கருதுபவர்களும் இருக்கின்றனர். என்றாலும் நல்லதையும் தீயதையும் பிரித்தறிவதற்கு தேவையான அழகிய வழிகாட்டலை இஸ்லாம் வழங்கியுள்ளது.

ஒரு தடவை நவாஸ் இப்னு ஸம் ஆன்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், நல்லவை மற்றும் பாவம் குறித்து கேட்ட பொழுது, 'நற்குணமும், நற்செயலும் நன்மையாகும். எது உன் உள்ளத்தில் நெருடலை ஏற்படுத்துமோ, எதை மக்கள் அறிந்து கொள்வதை நீ விரும்ப மாட்டாயோ, அதுவே பாவமாகும்' என்றார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

குறிப்பாக சிலர் மற்றவர் முன்னிலையில் சர்வ சாதாரணமாக புகைபிடித்தல் போன்ற தவறானதும் பிழையானதுமான செயற்பாடுகளில் ஈடுபடுவர். இவ்விதமான செயற்பாடுகளின் தீங்குகளையும் பாதிப்புக்களையும் அவர்களிடம் எடுத்துக்கூறினாலும் கூட அவற்றைப் பொருட்படுத்த மாட்டார்கள். அவ்வாறானவர்கள் கூட அவர்களுக்கு நெருக்கமான சிலரை காணும் பொழுது ஒளிந்து கொள்வர். சிலருக்கு அல்லது அவர்கள் விரும்பக்கூடியவர்களுக்கு தாம் செய்யக்கூடிய இக்காரியம் தெரிந்து விடக்கூடாது என நினைக்கின்றனர். அதைத்தான் நபி (ஸல்) அவர்கள் தீயச் செயல்களை பிரித்தறியும் அளவுகோலாக மிக அழகாக அறிவுறுத்தி இருக்கின்றார்கள்.

தன்னை கவனிக்கும் சிலரைக் கண்டு, தான் செய்யும் சில தவறான செயல்களை சிலர் மறைக்க முனைகின்றனர். ஆனால் இவை அனைத்தையும் அல்லாஹ் எந்நேரமும் கவனித்துக் கொண்டு இருக்கிறான் என்பதை மறந்து விடலாகாது.

அந்த வகையில் நற்குணத்தை தங்களது தலையாய கடமையாக இறைவிசுவாசிகள் கருத வேண்டும் என்று இஸ்லாம் போதிக்கின்றது. நற்குணத்தினை பேணும் பண்பு, முஸ்லிமை ஓர் இஸ்லாமியன் என அடையாளப்படுத்துவதோடு மறுமையில் சுவர்க்கத்தினை எளிதில் பெறக் கூடிய வழியாகவும் அமைகிறது.

எனவே ஒழுக்கத்துடன் நற்குணத்தினை பேணி நடந்து சுவனத்துக்குரியவர்களாக இறைவனை மறுமையில் சந்திப்பதற்கு ஒவ்வொருவரும் முயற்சி செய்வது இன்றியமையாததாகும்.

மின்ஸார் இப்றாஹிம்

Post a Comment

0 Comments