Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ஒழுக்க விழுமியங்களை அதிகம் வலியுறுத்திய நபிகளார்...


இறைத்தூதர் பெருமானார் (ஸல்) அவர்களை இம்மானிலத்திற்கு அனுப்பப்பட்டதின் நோக்கத்தைக்கூறும் போது 'நல்லொழுக்கங்களைப் பரிபூரணமாக்குவதற்காகவே நான் அனுப்பப்பட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
(ஆதாரம்: அல் முவத்தா)

அல்லாஹ்வின் அடியாரில் யார் அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என நபிகளாரிடம் வினவப்பட்ட போது, சிறந்த ஒழுக்கமுடையவர்கள் எனப் பெருமானார் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (ஆதாரம்: இப்னு ஹிப்பான்)

மற்றொரு சந்தர்ப்பத்தில், மனிதர்களுக்குத் தரப்பட்ட மிகவும் சிறந்த பொருள் எது? எனச் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது, யாரிடம் சிறந்த ஒழுக்கப்பண்பாடுகள் இருக்கின்றதோ அதுவேயாகும்' என்று அன்னார் பதிலளித்துள்ளார்கள். (ஆதாரம்: திர்மிதி)

அதேநேரம், எந்த முஸ்லிமின் நம்பிக்கை பூரணமானது, முழுமையானது என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, யாரிடம் ஒழுக்கப்பண்பாடுகள் இருக்கின்றதோ அவர்களேயாவர் என பதிலளித்துள்ளார்கள். (ஆதாரம்: தப்ரானி),

இந்த நபிமொழிகள் நல்லொழுக்கத்தின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தி நிற்கின்றன. அதனால் அல்லாஹ்வை விசுவாசம் கொண்டவர்கள் அவன் மேல் ஈமான் கொள்ள வேண்டும், ஈமான் கொள்ளவில்லை என்றால் நம்பிக்கை வளராது. ஈமான் உறுதியானால், நல்லொழுக்கம் வளரும் எனவும் பெருமானார்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.நல்லொழுக்கம் இல்லையென்றால் நம்பிக்கை இல்லை என்றே பொருள்படும். அல்லாஹ் மீதும் மறுமைநாள் மீதும் நம்பிக்கை கொண்ட ஒரு மனிதன், நல்லதையே பேச வேண்டும் அல்லது, மௌனமாய் இருந்திடவேண்டும் என்றும் நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்: புஹாரி)

சிலர் தங்களைச் சிறந்தவர்கள் என்றும் நபி (ஸல்) அவர்களின் ஒழுக்கப் பண்பாடுகளைக் கடைப்பிடித்து நடக்கிறோம் என்றும் வாயளவில் கூறிக்கொள்கின்றனர்.

ஆனால் அவர்களிடம் எவ்விதமான நற்செயல்களோ - ஒழுக்கப் பண்பாடுகளோ காண்பதற்கில்லை, இவ்விதம் செயல்படுபவர்களை நாயகம் (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளார்கள்.

எனவோ முஸ்லிம்களாகிய நாம், எம்பெருமானார் (ஸல்) அவர்கள் முன்னுதாரணமாக வாழ்ந்த ஒழுக்கப் பண்பாடுகளைக் கடைப்பிடித்து சிறந்த ஒழுக்கசீலர்களாகவும் மனிதத்தன்மை உடையவர்களாகவும்நல்லொழுக்கம் மிக்கவர்களாகவும் ஏனையோருக்கு முன்மாதிரி மிக்கவுர்களாகவும் திகழ்ந்து அல்லாஹ்வின் அருளைப்பெற்றிட முயற்சிப்போம்.

ஏ.ஸீ.எம், ஹனீபா...
மஸ்ஸல பேருவளை.

Post a Comment

0 Comments