Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

எலான் மஸ்க்கின் இறுதி எச்சரிக்கையால் நூற்றுக்கணக்கான டுவிட்டர் ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா..!

எலான் மஸ்க்கின் இறுதி எச்சரிக்கையை அடுத்து, நூற்றுக்கணக்கான டுவிட்டர் ஊழியர்கள் மொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர்.

சமூக வலைதளமான டுவிட்டரை கையகப்படுத்திய பிறகு, உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் அந்நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறார்.

டுவிட்டர் அதிக லாபத்தை உருவாக்கத் தொடங்கவில்லை என்றால் திவால் நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறிய மஸ்க், வீட்டில் இருந்து வேலை செய்யும் கொள்கையில் பல மாற்றங்களைச் செய்துள்ளார். அதன்படி ஊழியர்கள் ஒரு வாரத்துக்கு 80 மணி நேரம் பணிபுரிய தயாராக வேண்டும் என்றும் கூறினார்.

இந்த நிலையில், டுவிட்டர் ஊழியர்கள் அனைவருக்கும் தொடர்ந்து பணி அழுத்தம் அதிகரித்து வருகிறது.கடந்த புதன்கிழமை இரவு, டுவிட்டரில் மீதமுள்ள ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினார். எலான் மஸ்க் அனுப்பிய மின்னஞ்சலில், டுவிட்டர் வெற்றிபெற நாம் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். கடின உழைப்புக்கு தயாராக இருங்கள் அல்லது மூன்று மாத சம்பளத்துடன் ராஜினாமா செய்யலாம் என்று அனைத்து ஊழியர்களிடமும் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர்கள் விரைந்து முடிவெடுக்க, நேற்று ஒருநாள் கால அவகாசம் வழங்கினார்.எலான் மஸ்க்கின் இறுதி எச்சரிக்கையை அடுத்து, நூற்றுக்கணக்கான டுவிட்டர் ஊழியர்கள் மொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர்.

மேலும், டுவிட்டரில் உள்ள பல முக்கியமான குழுக்கள் பணிநீக்கம் செய்யப்பட்டன, சில தாமாக ராஜினாமா செய்துவிட்டன. இது நிறுவனத்தை மீட்டெடுக்க இயலாத அபாயத்தில் தள்ளியுள்ளது என்று ஊழியர்கள் கூறுகின்றனர்.இந்த புதிய வெளியேற்றத்தில் எத்தனை ஊழியர்கள் டுவிட்டரை விட்டு வெளியேறியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இதுமட்டுமின்றி பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் நிறுவனத்தை நாசப்படுத்த முயற்சிப்பார்கள் என்று மஸ்க் மற்றும் அவரது தலைமைக் குழு அஞ்சுவதால், ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படும் டுவிட்டர் அலுவலகங்களையும் மஸ்க் தற்போது மூடியுள்ளார். ஊழியர்கள் மொத்தமாக ராஜினாமா செய்த அலுவலகங்களுக்கு பூட்டு போடப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் டுவிட்டர் அலுவலகங்கள் நவம்பர் 21ம் தேதி மீண்டும் திறக்கப்படும் என செய்திகள் வெளியாகி வருகின்றன. தங்கள் குழு உறுப்பினர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு மேலாளர்களை மஸ்க் கேட்டுக் கொண்டுள்ளார்.

எலான் மஸ்க், இப்போது டுவிட்டருக்கு புதிய தலைமையை தேடிக் கொண்டிருக்கிறார். மஸ்க் தனது பொறுப்பை சரியாக நிறைவேற்றக்கூடிய ஒரு தலைமையை எதிர்பார்க்கிறார். டுவிட்டரின் அமைப்பை சீக்கிரம் மறுசீரமைப்பதன் மூலம் டெஸ்லாவுக்கு அதிக நேரத்தை செலவழிக்க விரும்புகிறார்.

Post a Comment

0 Comments