Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

மலேசிய பொதுத் தேர்தல்: வாக்காளர்களை கவர பணம், தமிழ் சினிமா பாடல்கள்...!

கடந்த இரண்டு ஆண்டுகளாக, மலேசிய மக்கள் எதிர்பார்த்த நிகழ்வு எதிர்வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றுதான் மலேசியாவில் 15ஆவது பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மலேசியா சுதந்திரம் பெற்ற பின்னர், கடந்த 2018ஆம் ஆண்டு வரை 14 பொதுத்தேர்தல்களை மலேசியர்கள் சந்தித்துள்ளனர். கடந்த தேர்தலைத் தவிர, மற்ற தேர்தல்கள் அனைத்துமே பெரும்பாலும் அதிக பரபரப்புகளோ, எதிர்பார்ப்புகளோ இன்றிதான் நடந்துள்ளன.

பாரிசான் நேசனல் எனப்படும் தேசிய முன்னணி கூட்டணியே தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வந்துள்ளது. எதிர்க்கட்சிகள் சொற்ப எண்ணிக்கையிலான தொகுதிகளில் மட்டுமே வென்று வந்துள்ளன.

2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அன்றைய எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய பக்காத்தான் ஹராப்பான் எனப்படும் நம்பிக்கை கூட்டணி பெரும் வெற்றி பெற்று ஆட்சியமைத்து. மலேசியாவில் முதன் முறையாக நிகழ்ந்த ஆட்சி மாற்றம் என்பதால் உலக நாடுகளின் பார்வை அதன் மீது பதிந்தது. அதன் பிறகும் மலேசிய அரசியல் களத்தில் பரபரப்புக்குப் பஞ்சமில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் மலேசிய குடிமக்கள் நான்கு பிரதமர்களைப் பார்த்துவிட்டனர். அரசியல் குழப்பத்தின் உச்சமும், பொருளாதார வீழ்ச்சியும் மலேசியர்களை அதிகம் யோசிக்க வைத்தது எனில், கொரோனா தொற்றுப் பரவலும் சுயநல அரசியலும் அம்மக்களிடம் அச்சத்தையும் ஒருவித கோபம் கலந்த சலிப்பையும் ஏற்படுத்தி உள்ளது எனலாம்.

வரலாறு காணாத போட்டி:

மலேசியாவில் இம்முறை தேர்தல் களம் தொடக்கம் முதலே களைகட்டி உள்ளது. சிறிதும் பெரிதுமாக நான்கு கூட்டணிகள் களமிறங்கி உள்ளன. மலேசியாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட தற்போது நான்கு பேர் களத்தில் உள்ளனர். நால்வருமே இன்று வெவ்வேறு அரசியல் கட்சிக் கூட்டணிக்கு தலைமையேற்றுள்ள போதிலும், கடந்த காலத்தில் ஒரே கட்சியில் இருந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்க அம்சம்.

மகாதீர் மொஹம்மத், அன்வார் இப்ராகிம், நடப்பு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப், மொஹிதின் யாசின் ஆகிய நால்வரும் பிரதமராகும் கனவுகளோடு, வியூகங்களை வகுத்துள்ளனர். அதனால் போட்டி கடுமையாக இருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.



நடப்பு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப்

மலேசிய வரலாற்றில் இதுபோன்ற கடும் போட்டி நிறைந்த தேர்தல் நடைபெற்றதில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். பிரசாரக் கூட்டங்களின்போது மேடைக்கு எதிரே உள்ள இருக்கைகள் காலியாக காட்சியளிக்கின்றன.

அதேசமயம் சமூக ஊடகங்கள் வழி அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் பிரசார நடவடிக்கைகள் களைகட்டி உள்ளன. வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டுவிட்டர் என்று அனைத்துவிதமான வாய்ப்புகள் மூலமாக வாக்காளர்களிடம் 'பேசி' வருகிறார்கள் வேட்பாளர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மலேசியா இத்தகைய காட்சிகளைக் காணவில்லை. மாறாக பிரசார கூட்டங்களில் அனல் பறந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர்.

தலைவர்கள் எதிர்த்தரப்பின் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினர். குறிப்பாக அன்றைய ஆளும்தரப்பின் மீது எதிர்க்கட்சிகள் முன்வைத்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பொதுவெளியில் பரவலாக விவாதிக்கப்பட்டன. இதற்கு சமூக ஊடகங்களும் கைகொடுத்தன.

மூலை முடுக்குகளில் எல்லாம் விவாதங்கள் நடைபெற்றன. ஊழலுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாகவும், மலேசியாவைக் காப்பாற்ற வேண்டும் என்றும் பலர் ஆவேசப்பட்டனர்.

இத்தனைக்கும் எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைவரான அன்வார் இப்ராகிம் அச்சமயம் சிறையில் இருந்தார். எனினும் அன்வார் அலை வீசியது.

அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கேற்ப, மலேசிய அரசியல் களத்தில் திடீர்த் திருப்பங்கள் நிகழ்ந்தது. பரம எதிரிகள் என்று கருதப்பட்ட அன்வாரும் மகாதீரும் நேசக்கரங்களை நீட்டினர், இணைந்து செயல்பட முடிவெடுத்தனர். தமது 93ஆவது வயதில் மீண்டும் மலேசியாவின் பிரதமரானார். இதை யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும்?

அதன் பின்னர் அன்வாருக்கு அரச மன்னிப்பு கிடைத்து அவர் சிறையில் இருந்து விடுதலையானதும், தேர்தலுக்கு முன்பு செய்துகொண்ட ஒப்பந்தப்படி, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரிடம் மகாதீர் பிரதமர் பதவியை ஒப்படைக்கத் தவறியதும் மலேசிய அரசியல் வரலாற்றின் குழப்ப பக்கங்களுக்குச் சொந்தமானவை.

Post a Comment

0 Comments