Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

உறவுகளை பேணுவோம்...


எந்த ஒரு மனிதனும் உறவுகளே வேண்டாம் என்று கூறி தன்னந்தனியாக வாழ்ந்துவிட முடியாது. உறவுகள் சில சமயங்களில் பெரும் சுமையாக இருந்தாலும் உறவுகள்தான் மனிதனுக்கு மிகப் பெரும் பலம். 

ஆபத்துகளில் கைகொடுக்கும், துயரங்களில் ஆறுதல் கூறும், இன்ப துன்பங்களில் அக்கரையோடு பங்கெடுத்துக்கொள்ளும் ஒன்றுதான் உறவுகள். இன்றைக்கு உறவுகளின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் உணராமல் உறவுகளோடு சேர்ந்து வாழாமல் உறவுகளை முறித்துக் கொண்டும் பகைத்துக் கொண்டும் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

உறவுகள் என்றால் யார்? அவர்களால் என்ன பயன்? என்பதை விளங்காமல் உறவுகளால் நமக்கு சிக்கலும், சிரமமும்தான் ஏற்படுகிறது என்று கருதி உறவுகளோடு சேர்ந்து வாழாமல் இருக்கிறார்கள்.

இஸ்லாம் உறவுகளின் முக்கியத்துவத்தையும், அதன் நன்மைகளையும் தெளிவுபடுத்தியுள்ளது. அல்லாஹ் தன் அருள்மறையில் உறவுகளின் முக்கியத்துவத்தைப் பற்றி பல இடங்களில் கூறுகிறான். உறவுகளுக்குப் பொருளாதரம் தேவைப்படும்போது பொருள் மூலமாகவும், சில நேரங்களில் உடல் உழைப்பின் மூலமாகவும், சில நேரங்களில் உறவுகளுக்கு சலாம் கூறுவதன் மூலமாகவும், சில நேரங்களில் சிரித்த முகத்தோடு அவர்களைச் சந்திப்பதின் மூலமாகவும், சில நேரங்களில் அவர்களுக்கு நல்ல உபதேசங்களைச் செய்வதன் மூலமாகவும், சில நேரங்களில் அவர்களுக்கு ஏற்படும் அநீதிகளுக்கு எதிராக உதவி செய்வதன் மூலமாகவும், சில நேரங்களில் அவர்கள் தங்களுக்கு தீங்கிழைத்துவிட்டால் அவற்றை மன்னித்தல் போன்ற ஏராளமான காரியங்களின் மூலமாகவும் உறவினர்களுக்கு நாம் நன்மைகள் செய்யலாம். அதுதான் உறவினர்களுக்கு உபகாரம் செய்வதின் பொருளாகும்.

'அல்லாஹ்வை வணங்குங்கள், அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள். பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள். பெருமையடித்து கர்வம் கொள்பவரை அல்லாஹ் நேசிக்கமாட்டான்'. (அல்குர்ஆன் 4:36)

'உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவர்களின் உரிமையை வழங்குவீராக. அல்லாஹ்வின் முகத்தை நாடுவோருக்கு இதுவே சிறந்தது. அவர்களே வெற்றி பெற்றோர்'. (அல்குர்ஆன் 30:38)

'தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்). நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை நன்கறிந்தவன் எனக் கூறுவீராக. (அல்குர்ஆன் 2:215)

இவ்வாறு அல்லாஹ் உறவினர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும், அவர்களின் உரிமையை வழங்க வேண்டும் என்றும், இதுதான் சிறந்தது என்றும், நன்மையானது என்றும் வலியுறுத்தியுள்ளான்.

அதேநேரம் உறவினர்களுக்கு நன்மை செய்யாவிட்டால், அவர்களுக்குரிய உரிமையை வழங்காவிட்டால் இறைவனின் தண்டனைதான் நமக்கு கிடைக்கும் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.

'உறவினர்கள் விஷயத்தில் நீங்கள் (அஞ்சுங்கள்) அல்லாஹ் உங்களை கண்காணிப்பவனாக இருக்கிறான்'. (அல் குர்ஆன் 4:1)

பொருளாதார வசதியுடனும், செல்வச் செழிப்புடனும் வாழ வேண்டும். அதே நேரத்தில் நீண்ட ஆயுளையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் மனிதன் ஆசைப்படுகிறான். அவனது ஆசைக்கேற்ப அவனுக்கு அமைய வேண்டுமானால் இஸ்லாம் சில காரியங்களைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அவற்றை செய்துவிட்டாலே அவன் நினைக்கும் பாக்கியங்களை அல்லாஹ் அவனுக்கு வழங்குகிறான்.

நபி (ஸல்) அவர்கள், 'தமது வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதையும், வாழ்நாள் நீட்டிக்கப்படுவதையும் விரும்புகின்றவர் தமது உறவைப் பேணி வாழட்டும்.' என்று கூறினார்கள். (ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

எனவே இறைவனின் கட்டளைகளுக்கும் நபி (ஸல்) அவர்களின் போதனைகளுக்கும் அமைய உறவுகளைப் பேணிக்கொள்வோம்.

- அபூமுஷீரா -

Post a Comment

0 Comments