Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

உள்ளத்தின் பேருண்மை...!


ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், 'மனம் ஓர் இறகைப் போன்றது. அந்த இறகோ திறந்த மைதானத்தில் கிடக்கிறது. நாலா புறத்திலிருந்தும் வீசுகின்ற காற்று அதனை இங்கும் அங்கும் புரட்டிப்போடுகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்: இப்னுமாஜா)

இந்நபிமொழி மூன்று கூறுகளைக் கொண்டதாக உள்ளது.ஒரு திறந்த வெளி மைதானம். அம்மைதானத்தில் நான்கு திசையிலிருந்தும் காற்று தங்குதடையின்றி வீசுகிறது. அது மட்டுமல்ல அம்மைதானத்தில் கிடக்கின்ற யாதொரு சின்னஞ்சிறு பொருளும் கண்களை உருத்துகிறது. அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது.

அந்த திறந்தவெளி மைதானத்தில் ஓர் இறகு கிடக்கிறது. அதனை எடுப்பார் எவரும் இல்லை. அதனை எடுத்து பாதுகாப்பான இடத்தில் வைக்கக்கூடிய எவரும் இல்லை. அதனை எடுத்துப் பயன்படுத்தக் கூடியவரும் எவரும் இல்லை.

கேட்பாரற்று, கவனிப்பாரற்று கிடக்கின்ற அந்த இறகு வரை செல்லக்கூடியது காற்று மட்டுமே.

மற்றொரு தடவை நபி (ஸல்) அவர்கள், 'மனிதர்களின் மனங்கள் யாவும் கருணைமிக்க அல்லாஹ்வின் இரு விரல்களுக்கு இடையே சிக்கியிருக்கும் ஒரே ஒரு மனதைப் போன்றவையே. தனது இரண்டு விரல்களுக்கிடையே அதனைப் பிடித்திருக்கும் கருணைமிக்க அல்லாஹ் தனது விருப்பத்திற்கு ஏற்ப அப்படியும் இப்படியும் திருப்பிக் கொண்டே இருக்கின்றான்' என்று குறிப்பிட்டதோடு பின்வருமாறு பிரார்த்தித்துமுள்ளார்கள்.

'யா அல்லாஹ்! இதயங்களைத் திருப்பியமைப்பவனே! எங்களது இதயங்களை உனது கீழ்ப்படிதலின் பக்கம் திருப்புவாயாக!'

மனிதன் தனது மன ஓட்டங்களுக்குக் கட்டுப்பட்டவன் என்பது ஒரு பேருண்மை ஆகும். மனிதனைச் சீர்திருத்துவதுதான் வாழ்க்கையை சீர்திருத்துவதாகும். அதுவே வெற்றிக்கான உத்தரவாதமாகும். மறுமை வெற்றிகூட உண்மையில் மனதைச் சீர்திருத்துவதை பொருத்தே இருக்கின்றது. அந்நாளில், செல்வமும் பிள்ளைகளும் எவ்வித பயனும் அளித்திட மாட்டா. ஆனால், எந்த மனிதர் தூய்மையான உள்ளத்துடன் அல்லாஹ்வின் சமூகத்திற்கு வருகை தருகின்றாரோ அவரைத்தவிர' 
(அல்குர்ஆன்: 26:88,89)

(கூறப்படும்) இதுதான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டு வந்தது. அதிகம் மீளக் கூடியவராகவும் மிகவும் பேணுதலுடன் வாழக்கூடியவராகவும் இருந்த ஒவ்வொருவருக்கும் உரியது. அவரோ பார்க்காமலேயே கருணை மிக்க அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொண்டிருந்தார். மேலும், அவன் பக்கம் திரும்பக்கூடிய உள்ளத்துடனும் வந்திருக்கின்றார். நுழைந்து விடுங்கள் சுவனத்தில் முழு அமைதியுடன் 
(அல்குர்ஆன்: 50:32,33)

-அபூமுஜாஹித்-

Post a Comment

0 Comments