Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இஸ்லாத்தின் புனித நான்கு மாதங்கள்...!


உலகம் படைக்கப்பட்டது முதல் வருடத்துக்கு பன்னிரண்டு மாதங்களை அல்லாஹ் ஏற்படுத்தி வைத்துள்ளான். அதில் நான்கு மாதங்கள் புனிதமானவை. தொடராக வரக்கூடிய துல் கஃதா, துல் ஹஜ், முஹர்ரம் போன்ற மாதங்களும் தனித்து வரக்கூடிய ரஜப் மாதமும் இத்தகையவை ஆகும்.

இதுபற்றி அல்லாஹ் 'வானங்களும் பூமியும் படைக்கப்பட்டது முதல் அல்லாஹ்விடம் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு என்று அல்குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான். அதிலே நான்கு மாதங்கள் புனிதமானவை. இந்த மாதங்களிலே உங்களுக்கு நீங்கள் அநீதி இழைத்துக்கொள்ள வேண்டாம்' (தவ்பா 36)

இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் இவ்வசனத்திற்கு அளித்துள்ள விளக்கத்தில், 'புனித இடங்களில் செய்யப்படுகின்ற பாவங்களுக்கு இரு மடங்கு பாவம் வழங்கப்படுவது போன்று புனித காலங்களில் செய்யப்படும் பாவச்செயல்களுக்கும் பாவம் மடங்குகளாக்கப்படும்' என்றுள்ளார்.

இவ்வசனத்தை விளக்கியுள்ள இமாம் கதாதா (ரஹ்) அவர்கள் 'பாவம் செய்வது எல்லா நிலைகளிலும் பாரதூரமானதாக இருந்தாலும் புனித மாதங்களில் பாவச்செயல்களில் ஈடுபடுவது ஏனைய தினங்களில் பாவம் செய்வதைவிட பாரதூரமானது' என்றுள்ளார். அத்தோடு 'அல்லாஹ், தான் நினைத்ததை கண்ணியப்படுத்தியும் வைத்துள்ளான். தனது படைப்புகளில் சிலவற்றை அல்லாஹ் சிறப்பாக்கியும் வைத்துள்ளான். மலக்குமார்களிலிருந்து சிலரை சில பொறுப்புகளுக்காக தெரிவு செய்துள்ளான். மனிதர்களிலிருந்து சிலரை தூதர்களாகத் தெரிவு செய்தான். பேச்சுக்களில் சிறப்பானதாக அல்லாஹ்வை நினைவு கூறுவதையும் பூமியிலே மஸ்ஜித்களையும் மாதங்களிலே ரமழானையும் சங்கையான மாதங்களையும், நாட்களிலே ஜும்ஆ தினத்தையும் இரவுகளிலே லைலதுல் கத்ரையும் தெரிவு செய்துள்ளான்' என்று குறிப்பிடுகின்றார். 
(ஆதாரம்- தப்ஸீர் இப்னு கஸீர்)

இவ்வசனம் பற்றி கூறுகின்ற இமாம் குர்துபி (ரஹ்) அவர்கள் 'அமல்களை நான்கு வகையாக வகைப்படுத்தலாம். புனித மாதத்தில் புனித இடங்களில் செய்யப்படுகின்றவை. இவை முதல் தரத்தில் காணப்படும். புனித இடங்களில் சாதாரண காலங்களில் செய்கின்றவைகள் இரண்டாம் தரத்தில் இருக்கும். சாதாரண இடங்களில் புனித மாதங்களில் செய்கின்றவைகள் மூன்றாவது நிலையில் இருக்கும். சாதாரண காலங்களில் சாதாரண இடங்களில் செய்பவை நான்காவது தரத்தில் இருக்கும் என்பதாக அபிப்பிராயம் தெரிவிக்கின்றார். நபியின் மனைவியர்கள் செய்கின்ற பாவச்செயலுக்கு இரு மடங்குகள் பாவம் வழங்கப்படும் என்ற சூறா அஹ்ஸாபின் 30 வது ஆயத்தை இதற்கு ஆதாரமாக முன்வைத்துள்ளார்கள்.

புனித மாதங்களில் செய்யவேண்டிய பிரத்தியேகமான அமல்கள் என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனினும் அனைத்துவிதமான நல்ல விடயங்களையும் இம்மாதங்களில் செய்வது தடுக்கப்படவில்லை. இவ்வகையில் நல்ல விடயங்களை அதிகமாக செய்வதும் தீய விடயங்களிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வதும் மிகவும் அவசியமானது. 'புனித மாதங்களில் நோன்பிருங்கள். அதனை விட்டுவிடுங்கள், புனித மாதங்களில் நோன்பிருங்கள். அதனை விட்டுவிடுங்கள், புனித மாதங்களில் நோன்பிருங்கள். அதனை விட்டுவிடுங்கள்' என்று மூன்று தடவைகள் நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்- அபூ தாவூத் 2428)

இதன் ஊடாகத் தொடராக நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் ஊக்குவிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

இப்னு உமர் (ரழி), இமாம் ஹஸனுல் பஸரி (ரஹ்) போன்றவர்கள் புனித மாதங்களில் நோன்பு நோற்றதாக இமாம் இப்னு ரஜப் அல் ஹன்பலி (ரஹ்) அவர்கள் தனது லதாஇபுல் மஆரிப் என்ற நூலில் பதிந்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் நான்கு உம்ராக்கள் செய்துள்ளார்கள். இவை துல் கஃதா மாத்திலே நிறைவேற்றப்பட்டுள்ளது.

'அல்லாஹ் காலங்களை தெரிவு செய்தான். அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான மாதங்கள் புனித மாதங்களாகும். புனித மாதங்களில் துல் ஹஜ் அல்லாஹ்வுக்கு மிக விருப்பத்துக்குரியதாகும். துல் ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து தினங்கள் அல்லாஹ்வுக்கு மிக விருப்பத்துக்குரியதாகும் 
(ஆதாரம்: லதாஇபுல் மஆரிப்)

ரஜப், ரமழானுக்கு தயாராகின்ற ஒரு மாதம். 'ரஜப் மாதம் பரகத்துகள் அருள்களின் திறவுகோளாகும்' என்று இமாம் இப்னு ரஜப் லதாஇபுல் மஆரிபில் குறிப்பிட்டுள்ளார்கள். 'ரஜப் தாவரங்களை விதைப்பதற்கான மாதம், ஷஃபான் அவற்றை வளர்ப்பதற்கான மாதம், ரமழான் அறுவடை செய்வதற்கான மாதம்' என்று இமாம் அபூ பக்கர் அல் வர்ராக் அல பல்கி(ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.
(லதாஇபுல் மஆரிப்)

துல் கஃதா, துல் ஹஜ், முஹர்ரம் போன்ற மாதங்கள் ஹஜ்ஜுக்கு தன்னை தயார்படுத்திக்கொள்வதற்கான மாதங்களாகும். துல் ஹஜ் மாதத்தில்தான் அல்லாஹ் சத்தியம் செய்த இரவுகள் காணப்படுகின்றன. அவை மிக சிறப்பான தினங்களுமாகும். மிக சிறப்பான தினமான 'அரபா' தினம் துல் ஹஜ் மாதத்திலே அமைந்துள்ளது.

ரமழானின் பின்னர் சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். பர்ழான தொழுகைக்கு பின்னர் இரவுத் தொழுகையே சிறந்த தொழுகையாகும்.
(ஆதாரம்: முஸ்லிம்)

'காலங்கள் சுழன்று வருகின்றன. ஒரு வருடத்திலே பன்னிரண்டு மாதங்கள் காணப்படுகின்றன. அதில் நான்கு மாதங்கள் புனிதமானவை. அவற்றில் மூன்று மாதங்கள் தொடராக வருகின்றன. துல் கஃதா, துல் ஹஜ், முஹர்ரம் போன்றவையே அவையாகும்.

அடுத்தது ஜமாதுல் ஆகிருக்கும் ஷஃபானுக்கும் இடைப்பட்ட ரஜப் மாதமாகும்
(ஆதாரம்: புஹாரி)

இந்த ஹதீஸ் ஏற்கனவே உள்ள அல் குர்ஆன் வசனத்தை உறுதிப்படுத்துகிறது.

புனித மாதங்களில் முஹர்ரம்தான் சிறந்ததாக இமாம் ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்கள் கருதுகின்றார்கள். 'புனிதமான மாதத்தைக்கொண்டுதான் வருடம் ஆரம்பிக்கின்றது. புனிதமான மாதத்துடன்தான் வருடம் முடிவடைகின்றது. ரமழானுக்கு பின்னர் அல்லாஹ்விடத்தில் சிறந்த மாதம் முஹர்ரம் தான். எனவேதான் முஹர்ரம் (புனிதமானது) என்று அதற்கு பெயரிடப்பட்டுள்ளது'

இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்திலும் புனித மாதங்கள் கண்ணியமானதாக கருதப்பட்டது. இஸ்லாத்துக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த ஜாஹிலிய்யக்கால அறபிகளும் இம்மாதங்களை மதித்து நடந்துள்ளார்கள். இம்மாதங்களில் யுத்தம் செய்வதை தவிர்ந்து நடந்துள்ளார்கள். தனது தந்தையை கொலை செய்தவனை முகத்துக்கு முகம் கண்ணுற்றாலும் பலிவாங்காது விட்டுவிட்டார்கள் என்று இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

அவர்களிடம் இது தொடர்பான விசித்திரமான ஒரு பழக்கமும் காணப்பட்டது. சிலபோது புனித மாதங்களை பிற்படுத்துவார்கள். மற்றும் சில சந்தர்ப்பங்களில் அதனை முற்படுத்தி அனுசரிப்பார்கள். இது 'நஸீஃ' என்று அழைக்கப்படுகிறது. இதனை இஸ்லாம் கண்டித்துள்ளது.

'நஸீஃ என்பது நிராகரிப்பை அதிகப்படுத்தும் செயலாகும். அதனால் நிராகரிப்பில் உள்ளவர்கள் மேலும் வழிகேட்டில் செல்கிறார்கள். ஒரு வருடத்தில் புனித மாதங்களில் யுத்தம் செய்வதை ஆகுமாக்கிக்கொள்கிறார்கள். பிரிதொரு மாதத்தில் அதனை தவிர்ந்து கொள்கிறார்கள். அல்லாஹ் தடுத்ததனை சமப்படுத்திக் கொள்வதற்காகவே இவ்வாறு அவர்கள் செய்கிறார்கள். அல்லாஹ் ஹராமாக்கியதை அவர்கள் ஹலாலாக்கிக் கொள்கிறார்கள். அவர்களது மோசமான செயல் அவர்களுக்கு அழகாக தெரிகிறது. 
(தவ்பா - 37)

இவ்வசனத்திலிருந்து புனித மாதங்களில் யுத்தம் செய்வது ஹராமாக்கப்பட்ட (தடுக்கப்பட்ட) விடயம் என்பதனை புரிந்துகொள்ள முடிகின்றது. இஸ்லாம் சமாதானத்தையும் சகவாழ்வையும் விரும்பும் மார்க்கம். தவிர்க்க முடியாத நிலையில் யுத்தம் ஏற்பட்டாலும்கூட நான்கு மாதங்கள் கட்டாயமான யுத்த நிறுத்தம் இருக்க வேண்டும் என்பது ஒரு கடமையாக சொல்லப்பட்டிருக்கிறது. 

இது இஸ்லாத்தின் ஒரு யுத்த ஒழுக்கமாகும். சமாதான நிலை அல்லது யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படல் வேண்டும்.
அதுவே இஸ்லாத்தின் வழிகாட்டலாகும்.

அஷ் ஷெய்க் யூ.கே றமீஸ்...
எம்.ஏ. (சமூகவியல்)

Post a Comment

0 Comments