Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இலங்கை முஸ்லிம்களுக்கு ACJU வழங்கும் 8 முக்கிய வழிகாட்டல்கள்....!


ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இம்மாதத்திலேயே அல்லாஹு தஆலா சங்கையான அல்-குர்ஆனை இறக்கி வைத்தான். இம்மாதம் ஒவ்வோர் அடியானும் அல்லாஹ்வுடனான நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்காக கடமையாக்கப்பட்டதாகும். இது துஆவினதும் பொறுமையினதும் ஸதகாவினதும் மாதமாகும்.

1. ரமழான் மாதத்தின் அனைத்து நோன்புகளையும் பேணுதலுடன் நோற்றல்.

2. அல்-குர்ஆன் இறக்கியருளப்பட்ட ரமழான் மாதத்தில் அல்-குர்ஆனுடனான நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தல். மேலும் அதனை அதிகம் ஓதுவதுடன் அதன் விளக்கவுரைகளை வாசிப்பதும் அதன் போதனைகளை எமது வாழ்வில் எடுத்து நடப்பதும் பிறருக்கு அதன்படி வாழ வழிகாட்டுவதும் அல்-குர்ஆன் மீதான எமது கடமைகள் ஆகும். ஓவ்வொரு தனி நபரும் அதிகமதிகம் அல்-குர்ஆனை ஓதி வருவதுடன் குறைந்தபட்சம் நாளாந்தம் ஒரு 'ஜுஸ்உ' வையாவது ஓத முயற்சி செய்தல்.

3. பர்ழான வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதோடு தராவீஹ் தொழுகை மற்றும் இரவுநேர தொழுகைகள் போன்ற சுன்னத்தான வணக்கங்களிலும் அதிகமானளவு ஈடுபடுதல்.

"ரமழானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் இரவு வணக்கத்தில் ஈடுபடுகின்றவரின் முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: ஸஹீஹுல் புகாரி)

4. துஆக்கள் அங்கீகரிக்கப்படுகின்ற மகத்தான இம்மாதத்தில் குறிப்பாக நோன்பு திறக்கும் நேரம், ஸஹர் நேரம், அதானுக்கும் இகாமத்துக்கும் இடைப்பட்ட நேரம் போன்றவற்றில் தனக்காகவும் தனது உறவுகளுக்காகவும் பிரார்த்தனைகளில் ஈடுபடுதல்.

5. ரமழானின் இறுதி 10 தினங்களில் லைலத்துல் கத்ரை எதிர்பார்த்து மேற்கொள்ளப்படும் இஃதிகாப் எனும் அமல் முக்கியத்துவம் பெறுவதால் அதனை மேற்கொள்வதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளல்.

6. சுயவிசாரணை (முஹாஸபா) செய்வதற்குரிய சந்தர்ப்பமாக ரமழானை ஆக்கிக் கொள்ளுதல்.

7. நாட்டில் பொருளாதார நெருக்கடியில் சிரமப்பட்டு வாழும் ஏழை எளியவர்கள் எம் ஒவ்வொருவரது சுற்றுச் சூழலிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். இச்சங்கைமிகு ரமழானில் வசதி படைத்தோர் ஏழைகள் மற்றும் ஸகாத் பெறத் தகுதியானோர்களுக்கு தங்களது ஸக்காத்தையும் ஸதகாக்களையும் உரிய முறையில் வழங்குவதோடு நோன்பு நோற்பதற்கும் திறப்பதற்குமான ஏற்பாடுகளை செய்துகொடுத்தல்.

8. நன்மைகளை அதிகம் பெற்றுத்தரும் இம்மாதத்தில் சமூக வலைத்தளங்கள் மற்றும் உள்ளக விளையாட்டு அரங்குகளில் நேரம் கழிப்பதையும் வேறு அநாவசியமான விடயங்களில் நேரத்தை வீணடிப்பதையும் முற்றாக தவிர்ந்துகொள்ளல்.

இவ் வழிகாட்டல்களைப் பின்பற்றி இப்புனித ரமழானை அமல்களைக் கொண்டு மிகச் சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் உதவிகளையும் ஜம்இய்யாவின் மாவட்ட, பிரதேசக் கிளைகள், மஸ்ஜித் நிர்வாகங்கள் மற்றும் இமாம்கள், மத்ரஸா உஸ்தாத்மார்கள் தத்தமது பிரதேசங்களில் மெற்கொள்ளுமாறு ஜம்இய்யா வேண்டிக்கொள்கிறது.

எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா நம்மனைவருக்கும் ரமழான் மாதத்தை அடையும் பாக்கியத்தை தந்தருள்வதோடு அவனது ரஹ்மத்தையும் மஃபிரத்தையும் நரக விடுதலையையும் பெற்ற கூட்டத்தில் எம்மையும் ஆக்கியருள்வானாக!

முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் எச். உமர்தீன்
செயலாளர் - பிரசாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Post a Comment

0 Comments