
இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரமான அல் குர்ஆன் நபி யூஸுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கையை அழகிய சரிதை என எடுத்துக்காட்டுகிறது. எல்லா காலத்திற்கும் புதிய புதிய விளக்கங்களுக்குச் சாத்தியக்கூறுகள் உள்ள நிகழ்வுகள் அத்தியாயம் யூஸுஃபில் உள்ளது. எடுத்துக்காட்டாக அரசனின் கனவைக் குறித்த நிகழ்வைக் கூறலாம்.
(ஒருநாள்) அரசன் கூறினான், “நான் ஒரு கனவு கண்டேன். ஏழு கொழுத்த பசுக்களை ஏழு மெலிந்த பசுக்கள் தின்று கொண்டிருக்கின்றன. மேலும் பசுமையான ஏழு தானியக் கதிர்களையும், ஏழு காய்ந்த கதிர்களையும் நான் கண்டேன். எனவே, அவையோரே! கனவிற்கான விளக்கத்தை நீங்கள் தெரிந்தவர்களாக இருந்தால் எனது கனவுக்குரிய விளக்கத்தைக் கூறுங்கள்!’ (அல் குர்ஆன் 12:43)
பைபிள், தல்மூத், அல் குர்ஆன் ஆகியவற்றில் இந்நிகழ்வு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. தொடர்ச்சியாகக் கனவு கண்டதால் அரசர் அந்த நாட்டின் ஜோதிடர்கள், பண்டிதர்கள், புரோகிதர்கள் ஆகியோரிடம் இக்கனவின் பலனை அறிந்து கொள்ள நாடினார். ஆனால் தங்கள் அறிவிற்கு உட்படாத, பொருள் ஏதுமில்லாத காட்சிகளாக இருந்தது அரசர் கண்ட கனவு. மெலிந்த பசுக்கள் கொழுத்த பசுக்கள், ஏழு பசுமை கதிர்கள், காய்ந்த கதிர்கள் என்பன போன்ற முரண்பாடான செயல்கள் எல்லாம் கலந்த ஒரு கலவையாக இருப்பதால் இந்தக் கனவு பொருளற்ற கனவு என அவர்கள் ஒதுக்கிவிட்டனர்.
இச்சூழ்நிலையில் யூஸுஃப்(அலை) அவர்களுடன் சிறையில் இருந்த இரண்டு கைதிகளில் ஒருவன் அரசனின் சேவகனாக அரண்மனைக்கு வருகிறான். அவன் யூஸுஃப்(அலை) அவர்களின் கனவுக்குப் பலன் கூறும் திறனை அறிந்திருந்ததால் அதை அரசரிடம் கூறினான். அரசர் யூஸுஃப் நபியிடம் தான் கண்ட கனவின் பலனை அறிந்து வருமாறு பணிக்கிறார்.
“(அவர் அங்கு சென்று கூறினார்) யூஸுஃபே! உண்மையாளரே! ஏழு கொழுத்த பசுக்களை ஏழு மெலிந்த பசுக்கள் தின்று கொண்டிருப்பதாகவும், மேலும் பசுமையான ஏழு கதிர்களையும் காய்ந்து போன ஏழு கதிர்களையும் கனவில் கண்டால் அதன் விளக்கம் என்ன என்பதை எங்களுக்குக் கூறுவீராக! நான் இம்மக்களிடம் திரும்பச் செல்ல வேண்டும். அவர்கள் அறிந்து கொள்ளக்கூடும்!. யூஸுஃப் கூறினார். ஏழாண்டுகள் வரை தொடர்ந்து நீங்கள் விவசாயம் செய்து கொண்டிருப்பீர்கள். (அந்த ஏழாண்டுகளில்) நீங்கள் அறுவடை செய்வதில் உங்கள் உணவுக்குப் பயன்படும் ஒரு சிறு பாகத்தைத் தவிர, மற்றவற்றை அவற்றின் கதிர்களிலேயே விட்டு வையுங்கள்! அதன் பின்னர் மிகக் கடினமான ஏழாண்டுகள் வரும். அப்போது அந்நேரத்திற்காக நீங்கள் சேகரித்து வைத்திருந்த அனைத்தும் உட்கொள்ளப்பட்டு விடும்! அவற்றிலிருந்து நீங்கள் தனியே பாதுகாத்து வைத்திருந்ததைத் தவிர! பின்னர் மீண்டும் ஓர் ஆண்டு வரும். அப்பொழுது அருள் மாரி பொழியப்பட்டு மக்களின் துயரங்கள் களையப்படும். அன்று அவர்கள் பழ ரசங்கள் பிழிவார்கள் (செழிப்பாக வாழ்வார்கள்)!’
(அல் குர்ஆன் 12:46-49)
இது ஒரு கனவின் பலன் மட்டுமல்ல. வரப்போகும் ஏழு ஆண்டின் செழிப்பைப் பற்றியும் அதைத் தொடர்ந்து வரப்போகும் வரட்சி பற்றிய எச்சரிக்கையாகவும் இருந்தது. அக்காலத்தில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். தானியங்களைச் சேமிக்க எப்படிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பன போன்ற செயல்பாடுகள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. வரட்சி காலங்களுக்குப் பிறகு வரப்போகும் வசந்த காலத்தைப் பற்றிய மகிழ்வான செய்தியும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
திருமறைக்கு விளக்கமளித்த நவீன அறிஞர்களும் இந்த விஷயத்தைப் பற்றி ஆய்வு செய்யும் ஆய்வாளர்களும் இந்தக் கனவின் பொருள் அறிதலுக்கு விரிவான விளக்கத்தை அளித்தனர். நெருக்கடி மேலாண்மை இக்கட்டான நிலைகளை எதிர்கொள்ள வேண்டிய முறை, யூஸுஃப் நபியின் செயல்திறனின் தலைமைப் பண்புகள், யூஸுஃப் (அலை) அவர்கள், நடைமுறைப்படுத்திய பொருளாதார அணுகுமுறை, எதிர்மறை பொருளாதார அணுகுமுறை செயல்படுத்தல், செழுமை ஏற்படும் பொழுது செலவைக் குறைத்து வரி அதிகப்படுத்திச் செயல்படுவது போன்ற பல செய்திகளை உள்ளடக்கியுள்ளது.
யூஸுஃப் நபியின் தானிய பாதுகாப்பு சேகரிப்புத் திட்டம் வளம் நிறைந்த நாட்டின் பொருளாதாரக் கொள்கைக்கு மேலும் பலத்தைச் சேர்த்தது. யூஸுஃப்(அலை) அவர்கள் அதைத் தெளிவாக எடுத்துரைத்து விளக்கவும் செய்தார். மனித குலத்திற்கு எக்காலமும் விளக்கிச் சொல்லும் விதமாக அல் குர்ஆன் அறிவியலின் பெரும் பெட்டகமாகவே உள்ளது.
சமூகம், பொருளாதாரம், இயற்கை ஆகியவை ஒன்றிணையும் பொழுதுதான் நிலையான சுபிட்ச வளர்ச்சி கிடைக்கும். நிலையான வளர்ச்சி என்பது இந்தத் தலைமுறையின் வாழ்க்கை நிலையை நிறைவு செய்வதுடன் வருங்காலத் தலைமுறைக்குத் தீமையற்ற உயர் வாழ்க்கை வசதிகளை உறுதிப்படுத்தப்பட வேண்டியது தார்மிகக் கடமையாகும்.
மனிதனை கலீஃபாவாக (தன் பிரதிநிதி) அல்லாஹ் பூமிக்கு அனுப்பி இருக்கிறான். பொருள்களின் விநியோகம் செய்யும் கடமையை மனிதர்களிடம் ஒப்படைத்துள்ளான். இறைநம்பிக்கை கொண்ட சமூகத்தை நடுநிலைச் சமுதாயம் என்று குர்ஆன் கூறுகிறது. இதன் மூலம் மனிதர்கள் பூமியையும் அதில் இருக்கும் பொருள்களையும் தங்களின் தேவைகளுக்கு நேர்மையாகப் பொறுப்புடன் உபயோகப்படுத்துவதுடன் சுற்றுச்சூழலை நீதியுடன் பரிபாலித்து பாதுகாக்கவும் செய்ய வேண்டும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
யூஸுஃப் நபி கண்ட கனவின் பொருளும் நவீன யுகத்தின் பசுமைப் புரட்சிக்கும் இடையே இருக்கும் பரஸ்பர உறவு மேலே கண்ட குர்ஆன் வசனங்களில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன் முறையான திட்டமிடுதலின் அடிப்படையில் யூஸுஃப்(அலை) நடைமுறைப்படுத்திய ஏழாண்டு பசுமைப் புரட்சி சீர்திருத்தத் திட்டம் நவீன பசுமைமயமாக்கல் திட்டத்தின் செயல்பாட்டை விரைவுபடுத்துகிறது. வருங்காலத் தலைமுறையின் தேவைகளைக் கருத்தில் கொண்டு இதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
அந்தக் காலத்தில் மக்களின் தேவைகளுக்குத் தீர்வு காண வேண்டியிருந்தது. கனவின் விளக்கத்தின் மூலம் அடுத்த 14 ஆண்டு எகிப்து பின்பற்ற வேண்டிய பசுமைப் புரட்சித்திட்டத்தை யூஸுஃப் நபி விளக்கிக் கொடுத்தார்கள். இந்த ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், நடைமுறைகள் அனைத்தும் எதிர்வரும் ஆண்டுகளில் நடைமுறைச் சாத்தியத்துடன் வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் செயல்படுத்தப்பட்டது.
ஏழு ஆண்டுகளின் முதல் கட்டத்தில் தானியங்களின் உற்பத்தியும் அதைச் சேமித்து பாதுகாப்பதற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் பலவித விவசாயப் பொருட்களும் உற்பத்தி செய்யப்பட்டது. கவனமாகவும் கருத்துடனும் செயல்பட்டதால் அதிக விளைச்சல் கிடைக்கப்பெற்றது. யூஸுஃப்(அலை) அவர்கள் தொடர்ச்சியாக உற்பத்தியைப் பெருக்க அறிவுறுத்தினார்கள். தானியங்கள் சேதமோ, விரயமோ ஆகாத வண்ணம் பாதுகாக்க விவசாயிகளிடம் அறிவுறுத்தவும் செய்தார்கள்.
தேவைக்கு மேல் ஒரு மணி தானியம்கூட சேதப்படாமல் யூஸுஃப் நபி ஏற்பாடு செய்திருந்த தானியக் கிடங்கிற்குக் கொண்டு வந்து சேர்த்தனர். எந்தவிதமான அத்துமீறலும் இல்லாமல் அக்கால மக்கள் தங்கள் தேவையைப் பூர்த்தி செய்து வருங்கால தலைமுறைக்காக நல்ல ஒரு பங்கைச் சேமிக்கவும் செய்தனர். இரண்டாம் கட்டம் ஏழு ஆண்டுகள் கடுமையான வரட்சியும் பஞ்சமும் ஏற்படும் என்று யூஸுஃப்(அலை) அவர்கள் அறிவித்திருந்தார்கள். அதனால் முதல் ஏழு ஆண்டுகள் அவர்கள் சேமித்து வைத்த தானியங்களை இரண்டாவது கட்டத்தில் அவர்கள் பயன்படுத்தினார்கள்.
தானியங்களை அதன் கதிரிலேயே பாதுகாக்கச் சொன்ன யூஸுஃப் நபியின் யோசனை மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. கதிரிலேயே பாதுகாத்ததால் பக்றீரியா, பங்கஸ் ஆகியவைகளின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டது. இந்த விஷயத்தை விஞ்ஞானமும் தெளிவுபடுத்தியுள்ளது. அது மட்டுமல்லாது அடித்த கதிர்கள் வரட்சிக் காலத்தில் கால்நடைகளுக்கு உணவாகவும் பயன்படுத்தப்பட்டது.
48ஆம் வசனத்தில் நீங்கள் சேகரித்து வைத்த தானியங்களைக் கடுமையான வரட்சியும் பஞ்சமும் ஏற்படும் நாட்களில் உபயோகிக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. நீங்கள் கொஞ்சம் தானியத்தை ஒதுக்கி வைத்திருக்கின்றீர்கள் அல்லவா என்பதன் கருத்து, இந்தப் பஞ்ச காலம் முடிந்து பின்வரும் ஆண்டுகளில் பயிர் செய்வதற்குக் கொஞ்சம் தானியத்தைக் கவனமாக ஒதுக்கி வைக்க வேண்டும் என்பதாகும். வரட்சியின்போது முழுவதையும் உபயோகித்து விட்டால் அதன் பின் பயிர் செய்ய வித்து இருக்காது. இதன் மூலம் பட்டினியும் பஞ்சமும் நீண்டு போகவும் வழிவகுக்கும்.
இந்த பசுமைப் புரட்சி ஏழாண்டு செயல்திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தால் எகிப்து கடுமையான பஞ்சத்தால் அழிந்து போயிருக்கும். இத்திட்டத்தால் எகிப்திய மக்கள் மட்டுமல்லாமல் அருகிலுள்ள பலஸ்தீன் உள்ளிட்ட நாடுகளுக்குக்கூட பயன்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. அதனையே குர்ஆன் குறிப்பிடுகிறது
எனவே அல் குர்ஆன் கூறும் இந்த அழகிய சரிதையில் இன்றைய மக்களுக்குப் பாடமும், படிப்பினையும் இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இமில்லை.
-அப்துல்லாஹ்-
0 Comments