
பூமியில் அல்லாஹ்வின் பிரதிநிதியே மனிதன். அந்த வகையில் முதல் மனிதன் ஆதம் (அலை) முதல் இறுதி மனிதன் வரை இப்பொறுப்பை நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டுக்கு மனிதர்கள் உட்பட்டவர்களாக உள்ளார்கள். அதனால் பூமியில் அல்லாஹ்வின் பிரதிநிதியாகச் செயற்பட்டு பூமியை நிர்வகிப்பது மனிதனின் முக்கிய பொறுப்பாகும். இப்பொறுப்பை நடைமுறைப்படுத்துவதை ஓர் ஒழுங்கில் அமைத்து இலகுபடுத்திக் கொள்வதற்காக சமூகக் கட்டமைப்புக்களையும் நிறுவனங்களையும் மனிதன் உருவாக்கிச் செயற்படுகிறான்.
இந்தக் கட்டமைப்புக்களும் நிறுவனங்களும் ஓர் அரசாங்கமாக இருந்தாலும் பொதுமக்களுக்கான தொண்டு நிறுவனமாக இருந்தாலும் மனிதன் தனது பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்துவதற்கான களமாக அமையப் பெறுவது முக்கியமானதாகும். அரசாங்கத்தின் தலைவர் மக்களின் பிரதிநிதியாகவே அந்தப் பொறுப்பினை ஏற்பது போன்று ஒவ்வொரு பொது நிறுவனங்களினதும் தலைவர்களாக நியமிக்கப்படுபவர்கள் அந்தச் சமூகத்தை அல்லது குறித்த தரப்பினரை பிரநிதித்துவப்படுத்துபவர்களாகவே நியமனம் பெறுகின்றனர். இதனூடாக குறித்த பொறுப்புக்களுக்கு வருபவர்கள் அல்லாஹ்வின் பிரதிநிதித்துவத்தை நிறைவேற்றும் கடப்பாட்டுக்கு உள்ளாகின்றனர்.
மக்களால் தமது பிரதிநிதியாக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு உரிய சபைக்கு அனுப்பப்படும் பொழுது குறித்த சபையில் இருந்து அவர் மக்களின் பிரதிநிதியாகச் செயற்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். அல்லாஹூத்தஆலாவும் தனது பிரதிநிதியாக உலகுக்கு மனிதனை அனுப்பும் போது இதனையே அவனுக்கு பொறுப்பாக்கினான். ஆதம் (அலை) அவர்களை அவன் அதற்கெனத் தயார்படுத்தினான். ஆகவே, மக்களின் பிரதிநிநிதியாகச் செயற்படுபவர்கள் தம்மை அதற்கெனத் தயார் செய்து கொள்வது முக்கியமானது.
ஆதம் (அலை) அவர்களைப் பிரதிநிதியாகப் படைத்து தனது பிரதிநிதித்துவத்தை நிறைவேற்றத் தேவையானவற்றை அவர் அறிந்திருக்க வேண்டும் என அல்லாஹூத்தஆலா விரும்பினான். அதனால் அதற்குரிய அறிவை அல்லாஹூத்தஆலா அவருக்கு வழங்கினான்.
“பின்பு (ஆதமைப் படைத்து) ஆதமுக்கு எல்லாப் (பொருள்களின்) பெயர்களையும் (அவற்றின் தன்மைகளையும்) கற்றுக் கொடுத்து, அவைகளை அந்த மலக்குகளுக்கு முன்பாக்கி “(மலக்குகளே! ஆதமுக்கு என்னுடைய பிரதிநிதி ஆவதற்குரிய தகுதியில்லை என்று கூறினீர்களே! இதில்) நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால் (இதோ உங்கள் முன்னிருக்கும்) இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்” எனக் கூறினான். (அல் குர்ஆன்: பகரா- 31).
இந்த வகையில் தனது பணியை நிறைவேற்றுவதற்குத் தேவையான அறிவைப் பெற்றிருப்பதை உயர்ந்த பண்பாக அல்லாஹூத்தஆலா இங்கு எடுத்துக் காட்டுகிறான். மக்களின் பிரதிநிதிகளாக சபைகளுக்கு அனுப்பப்படுகின்றவர்கள், அந்தச் சபையிலிருந்து ஆற்ற வேண்டிய பணி தொடர்பான அறிவைப் பெற்றிருப்பது, அல்லது அது தொடர்பான அறிவை வளர்த்துக் கொள்வது முக்கியமானதாகும்.
தனது பிரதிநிதி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டலையும் அல்லாஹூத்தஆலா வழங்கியுள்ளான். எது பாவம் என்பதையும் பாவத்தைத் தூண்டும் காரணி என்ன என்பதையும் அதிலிருந்து தவிர்ந்து கொள்வது எப்படி என்பதையும் சுவர்க்கத்தில் வைத்து வழிகாட்டியது போலவே, பாவம் செய்தால் எப்படி மீண்டு வருவது என்பதையும் சுவர்க்கத்துக்கு வெளியில் வைத்து அல்லாஹூத்தஆலா நபி ஆதம் (அலை) அவர்களுக்கு வழிகாட்டினான்.
இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்களுடைய உம்மத்தினருக்கு அல்லாஹூத்தஆலா அவனது வழிகாட்டல்களை பூரணமாக்கிக் கொடுத்திருக்கிறான். அந்த வகையில் தான் ஏற்றிருக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதற்கான வழிகாட்டல்களை நபியவர்களுக்கு வழிகாட்டலாக வழங்கப்பட்ட அல் குர்ஆனில் இருந்தும் நபியவர்களின் வாழ்க்கை வழிமுறைகளில் இருந்தும் பொறுப்புக்கள் வழங்கப்பட்டவர்கள் பெற்றுக் கொள்வது, தான் சார்ந்த இடத்தில் தனது பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதில் முக்கியமானதாகும்.
தான் வழிகாட்டல் பெறுவது போலவே தான் சார்ந்த இடங்களில் தேவையான வழிகாட்டல் வழங்குவதும் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு அவசியமானது.
ஒழுங்கு விதிகள், சட்ட திட்டங்களை வரையும் போதும், தீர்மானங்கள் எடுக்கும் போதும், கலந்தாலோசனைகள் செய்யப்படும் போதும் உரிய வழிகாட்டல்களை வழங்குவது சபைகளில் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் பொறுப்பாகும். அத்துடன் உரிய இடங்களில் பணிகள் சிறப்பாக நடைபெறுவதற்கான உபதேசங்களை, தான் எதிர்த்தரப்பில் இருந்த போதும் வழங்குவதும் இவர்களின் பணியே. நபி(ஸல்) அவர்கள் மார்க்கம் என்பது உபதேசம் என்று கூறியபோது, யாருக்கு யாரஸூலுல்லாஹ் என ஸஹாபாக்கள் வினவினார்கள். அதற்கு நபியவர்கள் அல்லாஹ்வுக்கு, அவனது வேதத்துக்கு, அவனது தூதருக்கு, முஸ்லிம்களின் தலைவர்களுக்கு, பொதுமக்களுக்கு (ஆதாரம்: முஸ்லிம்) என அனைத்துத் தரப்பினரையும் குறித்துக் காட்டினார்கள். அந்த வகையில் தான் சார்ந்திருக்கும் சபை தவறான வழியில் செல்லும் போதும், சரியான வழியைத் தேர்வு செய்வதில் தவறிழைக்கும் போதும் உபதேசம் செய்வது முக்கியமானதாகும்.
சமூகமொன்றின் பொறுப்புக் கூறும் இடமொன்றில் தலைவராகவோ அங்கத்தவராகவோ இருந்து பணியாற்றக் கிடைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டவர்கள் தமது பொறுப்பை ஓர் அமானிதமாக ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும். பதவிகள் என்பது பெருமையல்ல, பெருமை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. எனவே பதவி கிடைத்ததை வைத்து பெருமையடிப்பதையும் அதை வைத்து அடுத்தவர்களை இழிவாகக் கருதுவதையும் நடத்துவதையும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
பதவிகள் என்பது பொறுப்பாகும். ஏற்றிருக்கின்ற பொறுப்புக்களுக்கு வகை கூறுபவர்களாக பதவிக்கு வருபவர்கள் இருக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். உங்களது பொறுப்புக்கள் பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள் என்ற எச்சரிக்கையை கருத்திற் கொண்டு பொறுப்பாளர்கள் செயற்படுவது அவசியம்.
பூமியில் அல்லாஹ்வின் பிரதிநிதியின் பணி பற்றி அல்லாஹூத்தஆலா கூறும் போது, நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும் என அல் குர்ஆனின் பல இடங்களில் குறிப்பிடுகிறான். இறை நம்பிக்கையாளர்களான ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் பொறுப்பாளர்கள். அவர்கள் நன்மையை ஏவ வேண்டும், தீமையைத் தடுக்க வேண்டும் (அல் குர்ஆன்: தவ்பா 71) எனவும் அல்லாஹூத்தஆலா குறிப்பிடுகின்றான். மனிதர்களின் இந்தப் பண்பு தான் அவர்களை உயர்ந்த தரத்தில் வைத்து நோக்கக் கூடியதாக அமைகிறது எனவும் அல்லாஹூத்தஆலா கூறுகின்றான்.
நீங்கள் மக்களுக்காக உருவாக்கப்பட்ட மிகச் சிறந்த சமூகத்தினர். நீங்கள் நன்மையை ஏவுகிறீர்கள், தீமையைத் தடுக்கிறீர்கள் (அல் குர்ஆன்: ஆல இம்ரான் 110) என்ற அல் குர்ஆன் வசனங்கள் இதனைச் சுட்டிக் காட்டுகின்றன. ஆகவே எப்போதும் நல்லதை ஏவுவதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதிலும் தீயதுக்கு எதிராகச் செயற்படுவதிலும் சபைகளுக்குத் தெரிவு செய்யப்படுபவர்களின் பங்கு இருக்க வேண்டும்.
நல்லதை நடைமுறைப்படுத்துவதிலும் தீயதை ஒழிப்பதிலும் வேற்றுமைகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது. நல்லதைச் செய்வது யாராக இருந்தாலும், எதிர்த்தரப்பாக இருந்தாலும் அதற்கு ஆதரவளிக்க வேண்டும். தீயதைத் தடுப்பதில் யார் எவர் என்ற பேதமின்றி ஒத்துழைக்க வேண்டும். நன்மையிலும் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுவதிலும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்துக் கொள்ளுங்கள். பாவத்திலும் (தீமையிலும்) சைத்தானின் வழியைப் பின்பற்றுவதிலும் பரஸ்பரம் ஒத்துழைப்பதைத் தவிர்ந்து கொள்ளுங்கள் என்றும் அல்லாஹூத்தஆலா மனிதனுக்கு ஏவியிருக்கின்றான். ஆகவே தான் எந்தத் தரப்பில் இருந்தாலும் நன்மையிலும் தீமைக்கு எதிரான செயற்பாடுகளிலும் பரஸ்பரம் ஒத்துழைத்துக் கொள்ள வேண்டும்.
மக்களால் தெரிவு செய்யப்பட்டு சபைகளுக்கு பொறுப்பை நிறைவேற்றுவதற்காக அனுப்பப்படுபவர்கள் மக்களின் சார்பில் செயற்படக்கூடிய அல்லாஹ்வின் பிரதிநிதிகளாகவே அனுப்பி வைக்கப்படுகிறார்கள். மக்களுக்குப் பணிவிடை செய்து அல்லாஹ்வின் அன்பை அதிகமாகப் பெறும் பாக்கியம் பெற்றவர்கள் அவர்கள். அதனைச் சிறந்த முறையில் பயன்படுத்தி அல்லாஹ்வின் பிரதிநிதித்துவத்தை நிறைவேற்றுவதில் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றவர்களாக மாறுவதற்கு அவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வது இன்றியமையாததாகும்.
-பியாஸ் முஹம்மத்-
0 Comments